இந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போர் வரலாற்றில் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று... நமது தமிழ்த் தாய் வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் வீரக்கதை தான். வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு கற்பிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 77 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... நமது தமிழினத்தைச் சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியாருடையது!
“வேலு நாச்சியார்: பெண்மையின் பேராண்மை” என்ற இப்புதினத்தை நான் மிக இலகுவாக எழுதி முடித்து விடலாம், இது சிவகங்கைச் சீமைக்கும் ஆங்கிலேயனுக்கும் நடந்த ஒரு போர் என்ற ஒரே நேர்கோட்டில் நகரும் வரலாற்றுக் கதை தான் என்று எண்ணித் துவங்கினேன். ஆனால் அடுத்தடுத்து வரலாற்றுப் பக்ககங்களை ஆய்வு செய்து ஆவணங்களைச் சேகரித்து தொகுக்கும் போது தான் நான் எடுத்திருக்கும் பணி எத்துணைப் பெரியதென்று உணரத் துவங்கினேன். சிவகங்கைச் சீமை, அதைச் சுற்றி ஆங்கிலேயன், தஞ்சை மராட்டியன், மதுரை கான்சாகிப், ஆற்காடு நவாப் போன்ற எதிரிகளால் நடந்த அரசியல் சூழ்ச்சிகள், அதனை அடக்கி ஒடுக்க முத்து வடுகநாதர், வேலு நாச்சியார் தலைமையில் மருதிருவர் மற்றும் தளவாய் தாண்டவராயம் பிள்ளை துணையுடன் செய்த அரச தந்திரங்கள், அணுகுமுறைகள், வியூகங்கள் மற்றும் செயல்பாடுகள், தனது அரசியை வெள்ளையன் எத்துணை கொடுமைப் படுத்தியும் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்டு விதையாய் விழுந்த உடையாளின் தியாகம், பெண்கள் படை திரட்டும் அன்னையின் ஆளுமை, ஐதரலியிடம் உதவி கோருதல், விடுதலைப் போராட்டத்தை முடக்க வெள்ளையனுடன் கைகோர்த்த சிலம்பாசிரியர் வெற்றிவேலரின் சூழ்ச்சிகளும் அதனை முறியடித்து அவரைக் கொலை செய்யும் வீரப்பெரும்பாட்டி குயிலி, இராச இராசேசுவரி கோயிலில் நடந்த இறுதிப் போரில் உடைக்குள் ஆயுதங்களை மறைந்து வைத்துக் கொண்டு மக்களோடு மக்களாகக் கலந்து உள்ளே சென்று தாக்குதல் நடத்திய (இதைத்தான் இன்றைய காலங்களில் கொரில்லா தாக்குதல் முறை என்று அழைக்கின்றனர்) பெண்கள் படையின் சீற்றம் இவை அனைத்துக்கும் மேலாக இறுதி மீட்புப் போரில் தன் நாட்டின் விடுதலைக்காக தன்னைத் தானே எரியூட்டி ஆயுதக் கிடங்கிற்குள் பாய்ந்த குயிலியின் மெய் சிலிர்க்க வைக்கும் உயிர்க்கொடைத் தியாகம் என இந்தப் புனிதக் களம் ஆலமரமாக விரியத் துவங்கியது.
மகாகவி பாரதி முதலாய் பிற்காலத்தில் தோன்றிய பெண்ணுரிமைப் போராளிகள் அனைவரும் எப்படியெல்லாம் புதுமைப் பெண்கள் இருக்க வேண்டும் என்று விவரித்தார்களோ அப்படியெல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து காட்டியிருந்தனர் நமது சிவகங்கைத் தமிழச்சிகள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Delete your review
Your review will be permanently removed from this book.Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners