பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில்
சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில்
போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன்
எவ்வாறு வசந்தமாக்குகிறான் என்பதை காண்போம்மா...
தாய், தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத
ஒருவன் தன்னவளுக்கும், அவள் மகவுக்கும் தாயுமானவனாக
மாறி குடும்பம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என அடுத்தவர்
பொறாமை கொள்ளும் அளவிற்கு அன்பால் அழகிய இல்லறத்தை
உருவாக்குபவனின் கதை இது.
வணக்கம் வாசகர்களே!
நான் தீபா பாபு, என்னுடைய எழுத்துப் பயணத்தை துவக்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. எனது பெயரின் பின்னால் இருக்கும் என் கணவர் தான் எனது இந்த வெற்றி பயணத்திலும் உறுதுணையாக பின்னால் நிற்கிறார்.
இதுவரை பத்திற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி முடித்துவிட்டேன். அவற்றில் இரண்டு ஏற்கனவே புத்தகங்களாக வெளிவந்து விட்டது. "Notion Press" பதிப்பகத்தாரோடு இணைந்து மூன்றாவது நாவல் மூலம் எனது முதல் அடியை இங்கே எடுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் ஆதரவை பொறுத்து என்னுடைய மற்ற நாவல்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து வந்துக் கொண்டிருக்கும்.
என்னுடைய எழுத்துப் பாணி, அதாவது நான் கதைகளை எழுதும் பொழுது கருத்தில் கொண்டு வடிவமைப்பது. எப்பொழுதும் என் கதைகளில் தேவையில்லாத வில்லன், வில்லி என்கிற நெகடிவ் கதாபாத்திரங்கள் இருக்காது. சமூகத்தில் இயல்பாக நடக்கும் சம்பவங்களை, சூழ்நிலைகளை கொண்டே கதையின் போக்கு நகரும். இரண்டு, மூன்று அத்தியாயங்களை தாண்டும் பொழுதே இது கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல நிஜத்தில் வாழும் மனிதர்கள் என்று நீங்கள் மறக்கும் அளவிற்கு கதை உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும். அவர்களுக்காக மகிழ்வீர்கள், நகைப்பீர்கள், வருந்துவீர்கள் ஆகமொத்தம் அவர்களோடு ஒன்றாக பயணித்து ரசித்து படிப்பீர்கள்.
இது பல வாசகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த நெகிழ்ச்சியான வார்த்தைகள். நான் எழுதும் தமிழ் நடையை வெகுவாக ரசிப்பவர்கள், உங்களது கதையை முடிக்கும் பொழுது மனதில் தோன்றும் பாசிட்டிவ் எனர்ஜியை மறுப்பதற்கில்லை என்று பாராட்டவும் செய்திருக்கிறார்கள்.