You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவாழ்க்கையை வண்ணங்களாக்கும் காதல்...!
தென்றல் யாருக்குப் பிடிக்காது? தென்றலுக்குப் பிடிக்காதவர்கள்தான் யார்? மழை யாருக்குப் பிடிக்காது? மழைக்குப் பிடிக்காதவர்கள்தான் யார்? தென்றலும் மழையும் போல் தான் காதலும். காதல் பிடிக்காதவர்கள் யார்? காதல் இது வெறும் வார்த்தை இல்லை. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயற்கைச் சக்திகளில் ஒன்று. காதல் மனிதர்களுக்குள் சாதி மத முரண்களைக் களைந்து சமூக மாற்றத்திற்கும் மத நல்லிணக்கத்திற்கும் பெரிதும் துணை புரியும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். காதல் மனித மனங்களைப் புதுப்பித்து வாழ்க்கையை வண்ணங்கள் ஆக்குவதோடு மன எழுச்சியையும் ஏற்படுத்துகிறது. இப்படியான காதல்தான் மனிதனை மனிதனாகவும் மகத்தானவனாகவும் மாற்றுகிறது.
‟பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதுபோல்தான் இந்தப் பரந்த உலகத்தில் காதல் மனிதர்களுக்கிடையே மட்டுமல்ல புல், பூண்டு, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் முதலான உலகத்து அனைத்து உயிர்களுக்கும் உள்ள பொதுவான உணர்வு ஆகும். நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் ஓர் அழகான உணர்வுதான் காதல். இந்த உணர்வில் மயங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. காதல் எப்போதும் அன்பு பாசத்தைவிட ஒரு படி மேலே சென்று உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றது. ஆகையால் எல்லோரும் காதல் செய்யுங்கள். என் இனியவர்களே...! அன்பால் இனிப்பவர்களே...! ‟யுனெஸ்கோ அங்கீகரிக்க மறந்த உலக அதிசயம் நீ...!” என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு முழுவதும் பூஞ்சோலையில் மலர்ந்திருக்கும் பூக்கள் போல காதல் நிரம்பி இருக்கிறது. இத்தொகுப்பில் நான் எழுதி இருக்கும் கவிதைகள் எல்லாம் எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் நான் பார்த்து ரசித்த, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சில அழகான தருணங்கள். மேலும் நான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் என்னைக் கடந்து போன சில அழகு தேவதைகள் என்னுள் ஏற்படுத்திய இன்ப அதிர்வுகளே இங்கு கவிதைகளாகப் பூத்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.
நேசியுங்கள்...! சுவாசியுங்கள்...!! காதலை…!!!
கவிஞர் மா. பவுன்ராஜ்
தென்றலைத் தூதுவிட்டால் திசை மாறிப் போகும் என்று நான் நதியைத் தூது விட்ட நதியனூரில் (அரியலூர் மாவட்டம்) பிறப்பிக்கப்பட்டேன். பள்ளிக்கல்வியை எனது சொந்த ஊரிலேயே பயின்றேன். பட்டப்படிப்பிற்காக நெஞ்சை அள்ளும் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் B.Sc., விலங்கியல் பாடத்தில் பதியமிடப்பட்டேன். தஞ்சை - பூண்டி ஆ. வீரய்ய வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் M.Sc., விலங்கியல் பாடத்தில் படரவிடப்பட்டேன். மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் M.Sc., மருத்துவச் சமூக அறிவியல் மற்றும் M.Sc., ஆலோசனை உளவியல் ஆகிய முதுஅறிவியல் பட்டப்படிப்புகளிலும் முதன்மை பெற்றேன். சென்னை லயோலா கல்லூரி பூச்சியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு செய்து Ph. D., முனைவர் பட்டம் பெற்றேன். மேலும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியலில் (PGDESD) முதுநிலைப் பட்டயம் பெற்றேன்.
ஆய்வுத் தடங்களில் என் அறிவியல் பயணம் தொடர்ந்தாலும் என் அகத் தளத்தில் அனலாய் - கனலாய் - கனன்றுகொண்டிருந்தது தமிழ் இலக்கியம். பள்ளிப் பருவத்திலேயே கவிதைப் போட்டியில் பங்கேற்று "வானுயர் கோபுரம்" என்னும் தலைப்பில் கவிதை எழுதி முதல்பரிசு பெற்றேன். மேலும் கல்லூரியில் இளங்களை மூன்றாம் ஆண்டு பயிலும்போது கல்லூரி ஆண்டுமலரில் "விலங்கியல் காதல்" என்னும் தலைப்பில் கவிதை எழுதி துறைத் தலைவர் உள்ளிட்ட கல்லூரியில் பலரது பாராட்டுக்களைப் பெற்றேன்.
தமிழ்மீது கொண்ட தீராக் காதலால் கவிதை எழுதத் தொடங்கினேன். அதற்காக அழகான நினைவுகளை அசைபோட்டேன். கற்பனையில் காட்சி வாங்கினேன். எழுதுகோலில் மூச்சு வாங்கினேன். வாங்கிய மூச்சில் எழுந்த ஸ்வரங்கள்தான் "யுனெஸ்கோ அங்கீகரிக்க மறந்த உலக அதிசயம் நீ" என்ற இந்தக் கவிதைப் பூஞ்சோலை. இப்பூஞ்சோலையில் நீங்கள் பயணிக்கும் போதெல்லாம் உங்கள் இதயம் வானை நோக்கிச் சிறகடிக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன்
மா. பவுன்ராஜ்
நூலாசிரியர்
The items in your Cart will be deleted, click ok to proceed.